திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.23 திருவிற்கோலம் (கூவம்) பண் - காந்தாரபஞ்சமம் |
உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உடைவிடந் திருவிற் கோலமே.
|
1 |
சிற்றிடை யுமையொரு பங்கன் அங்கையில்
உற்றதோர் எரியினன் ஒருச ரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உடைவிடந் திருவிற் கோலமே.
|
2 |
ஐயன்நல் அதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாக மாகவுஞ்
செய்யவன் உடைவிடந் திருவிற் கோலமே.
|
3 |
விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ்
சிதைத்தவன் உடைவிடந் திருவிற் கோலமே.
|
4 |
முந்தினான் மூவருள் முதல்வ னாயினான்
கொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உடைவிடந் திருவிற் கோலமே.
|
5 |
தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உடைவிடந் திருவிற் கோலமே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளந்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோனி டர்படச்
சிரித்தவன் உடைவிடந் திருவிற் கோலமே.
|
8 |
திரிதரு புரமெரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமன தாற்ற லால்உருத்
தெரியலன் உடைவிடந் திருவிற் கோலமே.
|
9 |
சீர்மையில் சமணொடு சீர ரக்கையர்
நீர்மையில் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடுஞ்
சீர்மையி னானிடந் திருவிற் கோலமே.
|
10 |
கோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன்
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |